முதல் வாசகன்

சென்னை - தரமணியிலுள்ள "மைய்ய தொழில்நுட்ப கல்லூரி'யில் கணிப்பொறியியல் பிரிவில் 2002 லிருந்து 2005 வரை சேர்ந்து பயில ஆரம்பித்தேன். எங்கள் கல்லூரியின் வளாகத்திற்குள்ளாகவே 'எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி' யும் அமைந்திருந்தது. பள்ளிப் பருவத்திலிருந்தே கலை, இலக்கியத்தின் மீது தனியாத மோகம் என்னை பீடித்திருந்தது. ஓவியத்தின் மீதிருந்த தாகத்தை தொடர்ந்து புகைப்படங்களின் மீதும் எனது மயக்கம் கவியத் துவங்கியிருந்த காலம் அது. 'நிக்கான் எப்.எம்.2' வகை புகைப்படக் கருவியை வாங்குவதை எனது மாபெரும் லட்சியங்களுள் ஒன்றாகவே அப்போது வைத்திருந்தேன். வழக்கம்போல் கல்லூரியின் பாடப் புத்தகங்கள் என்னை மிரட்டவோ, உருட்டவோ செய்யவில்லை. விரும்பியபடி கல்லூரிக்குள் வருவதும், போவதுமாக இருந்தேன். துறைப் பேராசிரியர் புள்ளியப்பன் என்னுடைய திரைத்துறை ஆர்வத்தைப் புரிந்துகொண்டு ஊக்கமளித்தார். பெரும்பாலான நேரங்களில் பொறியியல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு திரைப்படக் கல்லூரியின் வளாகத்தின் எதிரிலுள்ள சுவற்றில் அமர்ந்து எதிர்கால கனவுகளில் மிதந்து கொண்டிருப்பேன். அப்போது அக்கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் பயின்ற சந்திரசேகர், தீபக்குமார் பாதி, சஞ்சய் போன்றவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். தீபக்குமார் பாதி ஒளிப்பதிவு பிரிவில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். தீபக்குமார் பாதியிடம் உதவி ஒளிப்பதிவாளராகும் வாய்ப்பு எனது நண்பர் ஒருவரின் மூலமாக கிடைத்தது.
நண்பர் சந்திரசேகர் எங்களது கல்லூரியில் 'எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்' பிரிவை எடுத்துப் படித்திருந்ததால், என்னிடம் ஒளிப்பதிவு சம்பந்தமான நுணுக்கங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ளுவார். அப்போது நான் இரண்டு திரைப்படம் சம்பந்தமான புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். ஒன்று "தி பைவ் சி.எஸ்.' மற்றொன்று "தி அமெரிக்கன் சினிமாட்டோகிராபி - செவன்த் எடிஷன்'. அக்கல்லூரியின் பல மாணவர்களிடத்தில் கேட்டுப் பார்த்தேன். யாரும் அந்தப் புத்தகம் குறித்து என்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. நான் முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து கல்லூரியில் தென்படுகிறவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஒருமுறை சந்திரசேகரிடம் கேட்டபோது சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தன்னுடைய அறையிலிருந்து கனத்த அந்த இரண்டு புத்தகங்களையும் எடுத்துவந்து என் கையில் கொடுத்து ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு திருப்பிக் கொடு என்றார். சற்று நான் கலங்கித்தான போனேன். அந்தப் புத்தகம் கைக்கு வந்த நாளை என்றென்றும் மறக்கவே முடியாது. சினிமாவே என் கைகளுக்குள் வசப்பட்டுக்கொண்டு விட்டதாக எண்ணி மிகுந்த குதூகலத்துடன் இருந்தேன். தீபக்குமார் பாதி முறைப்படி அடிப்படை புகைப்படைக் கலையை சொல்லிக் கொடுத்துப் பயிற்சியளித்தார். பிறகு, துபாயில் பணிபுரிந்துகொண்டிருந்த எனது மாமா பொன்னுரங்கத்திற்கு கடிதம் எழுதி, எனக்கு ஒரு கேமிரா வாங்கித் தர சிபாரிசு செய்து, புதிய கேமிரா ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார். அந்தப் புகைப்படக் கருவியைக் கொண்டு கண்ணில் பட்டதையெல்லாம் புகைப்படம் எடுத்தேன். தி-நகரில் அப்போது இயங்கிவந்த "மூர்த்திஸ் லேப்' எனக்கு சலுகை விலையில் புகைப்படங்களை பிரிண்ட் செய்து கொடுத்தது. நண்பர்களின் திருமணங்கள், த.மு.எ.ச.வின் மாநாடு, இலக்கிய நிகழ்வுகள், சில குறிப்பிட்ட ஆளுமைகள் என்று என்னுடைய தேடுதலில் அகப்பட்ட எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்தேன். அவ்வப்போது அந்தப் படங்களையெல்லாம் தீபக்குமார் பாதியிடம் காட்டி அதன் நிறை,குறைகளையும் சரி செய்து கொண்டேன்.
"மூர்த்திஸ் லேப்' மூலமாக பிரபல ஆங்கில வார இதழான "அவுட்லுக்'கின் ப்ரீலேன்ஸ் புகைப்படக் கலைஞர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலமாக ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனுக்கான நுணுக்கங்களையெல்லாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தீக்கதிர் நாளிதழின் 'வண்ணக்கதிர்' இதழில் கதைகளுக்கு ஓவியம் வரைந்துகொண்டே, ப்ரீலேன்ஸ் புகைப்படக் கலைஞராகவும் செயல்பட்டேன். பத்திரிகையாளர் அ.குமரேசன் வாரப் பத்திரிகைகள் சிலவற்றிக்கு என்னை சிபாரிசு செய்து புகைப்படம் எடுப்பதோடு எழுதவும் ஊக்கமளித்தார். அந்தசமயத்தில் நான் எழுதிய கவிதையொன்று "கல்கி' இதழில் பிரசுரமாகியது. அதன் தொடர்ச்சியாக கல்கியின் உதவி ஆசிரியர் கதிர்பாரதியின் நட்பு கிடைத்தது. அப்போது "சித்திரம் பேசுதடி' திரைப்படம் வெளியாகியிருந்த நேரம். கலை, இலக்கிய செயல்பாடுகளிலும் நான் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால் நண்பர் "நிழல்' திருநாவுக்கரசு "சத்யம்' தியேட்டரில் "பை சைக்கிள் தீவ்ஸ்' காலை காட்சிக்கு இலக்கிய மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களை அழைத்திருந்தார். அண்ணன் அஜயன் பாலாவுடன் அந்தப் படத்தை காண சென்றபோதுதான் சத்யம் தியேட்டரின் அருகேயுள்ள ப்ளாட்பாரத்தில் தங்கி, சர்ச் பார்க்கின் கீழ் இயங்கி வரும் ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரு சிறுமியைப் புகைப்படம் எடுத்தேன். பிறகு, ஆனந்த விகடன் இதழில் அந்தப் பெண்ணின் நேர்காணல் எனது புகைப்படங்களுடன் வெளியானது. எனது பெயரை விகடன் இதழில் கண்டபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அந்த நேர்காணலை கவிஞர் அய்யப்பமாதவன் எடுத்திருந்தார். அந்த சமயத்தில் 'சித்திரம் பேசுதடி' மற்று 'தம்பி' உள்ளிட்ட இரண்டு படங்களும் தியேட்டரில் வெளியாகி, பலத்த வரவேற்பைப் ரசிகர்களிடம் பெற்றிருந்தன. முதலில் இயக்குநர் மிஷ்கினை நேர்காணல் செய்ய அனுமதி வாங்கியிருந்தார் அய்யப்பமாதவன். அந்த நேர்காணலை புகைப்படமெடுக்க என்னை கேட்டுக்கொண்டார். என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்த போகிற சந்திப்பு அதுவென்று அப்போதும் நான் அறிந்திருக்கவே இல்லை!
சைதாப்பேட்டை - மேட்டுப்பாளையத்தின் அருகேயுள்ள நாயக்கமார் தெருவில் மிஷ்கின் ஸாரின் அலுவலகம் இருந்தது. அதிகாலையில் சுமார் எட்டு மணிக்கு நேர்காணல் என்பதால் தூக்கத்திலிருந்து வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து, என்னுடைய புகைப்படக் கருவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நேர்காணலுக்கு சென்றுபோதுதான் தெரிந்தது. என்னுடைய கேமிராவில் பிலிம் ரோலில் மூன்று பிம்பங்களை மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும் என்று. மிஷ்கின் - நேர்காணலின் போது வழக்கத்திற்கு மாறாக நான் எதுவும் பேசவில்லை. காரணம், மிஷ்கினின் ஆழமான பேச்சு என்னை கவர்ந்திருந்ததுதான்! மிஷ்கின் நேர்காணலின் இடையே ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார். நான் தயங்கினேன். அறையில் லைட்டிங் சரியில்லை என்றேன். பரவாயில்லை...என்றார். வேறு வழியின்றி ஒரு பிம்பத்தை பதிவு செய்தேன். அது சில்ஹவுட்டில் பதிவானது. இன்னும் ஒரு பிம்பத்தைதான் படம் பிடிக்க முடியும். ஆனால், வெளியே மிஷ்கினுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள இரண்டு நண்பர்கள் வேறு வந்திருந்தார்கள். சூழலை எப்படி சமாளிப்பது? என்ற யோசனையிலேயே இருந்தேன். அந்த நேர்காணல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. இப்போது என்னுடைய நேரம். ஆகவே, எல்லோரையும் ஒன்றாக நிற்க வைத்து ஒரு படத்தையும், மிஷ்கினை மட்டும் தனியாக நிற்க வைத்து ஒரு படத்தையும் எடுத்துவிட்டு, உடனடியாக கேமிராவை பேக்-அப் செய்து விட்டேன். மிஷ்கின் இன்னும் ஒன்று எடுக்கலாமே...என்றார். போதும் என்று கூறிவிட்டு, உடனடியாக அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். அந்த நேர்காணல் திண்ணை.காம் இணையதளத்தில் விரிவாக வெளியாகியிருந்தது. அடுத்து அண்ணன் சீமானை "தம்பி' படத்திற்காக நேர்காணல் செய்வதற்கு அவரிடம் அனுமதி வாங்கியிருந்தோம். "தம்பி' திரைப்படத்தைப் பார்க்க சென்றபோது கவிஞர் அய்யப்பமாதவன், "இயக்குநர் மிஷ்கின் உங்களை பேசச் சொல்லியிருக்கிறார்...'' என்றார். என்னை கலாய்க்கிறார் என்றுஎண்ணி அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். அவர் மறுபடியும் வற்புறுத்தி கூறவே, ஒரு வார காலத்திற்குப் பிறகு மிஷ்கினை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். "உடனே சந்திக்க முடியுமா...?'' என்றார். சம்மதம் தெரிவித்து, அவருடைய அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றேன். புகைப்படக்கலைஞர் ஹரிசங்கர்தான் என்னை முதலில் வரவேற்று, உட்கார வைத்தார். சில நிமிடங்களில் மிஷ்கினை அவருடைய அறையில் சந்தித்தேன். என்னைப் பற்றி விசாரித்தார். ""சினிமாவில் என்னவாக வேண்டும்?'' என்று கேட்டதற்கு, ""பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக வேண்டும். அவரிடம் உதவியாளராக சேருவதற்காக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்...'' என்றேன். ""பி.சி. என்னுடையடைய படத்திற்குத்தான் கேமிரா பண்றார். நீ அசிடெண்ட் டைரக்டராகி விடு. நாம் அவரை வேலை வாங்கலாம்...'' என்று கூறினார். நான் அமைதியாக இருந்தேன். சற்று யோசித்தவர், உடனே அறையிலிருந்து வெளியே என்னை கூட்டி வந்து தயாரிப்பாளர் ஸ்ரீகாந்திடம் காட்டி "ஸ்ரீகாந்த்... இவனை என்னுடைய அஸிடெண்ட்டாக சேர்த்திருக்கிறேன்...'' என்று கூறிவிட்டு அவருடைய அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டார்....கிராபியென் ப்ளாக்...என்கிற புகைப்படக் கலைஞன் அந்தக் கணத்திலிருந்து கோடம்பாக்கத்தின் உதவி இயக்குநர்களில் பட்டியலில் இடம்பிடித்தான்.
மிஷ்கின் தன்னுடைய திரைக்கதைகளை காபிரைட் செய்யும், புகைப்படமெடுக்கும் வேலைகளை எனக்கு கொடுத்தார். பிறகு, அவரை விட்டு நகர முடியாத உதவியாளராகவும் மாறிப்போனேன். நான் உதவி இயக்குநராகச் சேர்ந்த சில நாட்களிலேயே "சித்திரம் பேசுதடி' படத்தின் வெற்றி விழா, சென்னை - கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அண்ணன் மகேந்திர பூபதியை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து சந்தோஷப்பட்டேன். பிறகு, அலுவலக வேலையில் மூழ்கியிருந்த ஒரு நாளில் திரைப்படக் கல்லூரியிலிருந்து அந்த மாணவர் மிஷ்கினிடம் உதவியாளராக சேருவதற்கு விண்ணப்பத்துடன் வந்திருந்தார். நான் அதையெல்லாம் வாங்கி வைக்கும் வேலையை செய்து வந்தேன். அந்த மாணவரை மைய்ய தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும்போதே பார்த்திருக்கிறேன். திரைப்படக் கல்லூரியில் அவருடைய இறுதியாண்டு படம் தமிழ்நாடு அரசின் மாநில விருதைப் பெற்றிருந்ததும் எனக்குத் தெரியும். ஆனால், அவருக்கு மிஷ்கின் வாய்ப்பு வழங்கவில்லை. திரைப்படக் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் அன்றோடு முடிவுக்கு வந்தது. இரண்டொரு நாட்களிலேயே மிஷ்கினுடன் கேரளாவின் கோடை வாஸ்தலமான மூணாறுக்கு புறப்பட்டு சென்றேன். இன்று "நந்தலாலா' என்கிற படத்தின் முதல் காட்சியை அங்கேதான் மிஷ்கின் எழுதினார். சுமார் ஒன்பது மாதங்கள் எங்களது உதவி இயக்குநர் குழு அங்கே தங்கியிருந்தது. திரைக்கதை குறித்து விவாதிப்பது, உலகப் படங்களைப் பார்ப்பது, இலக்கிய வாசிப்பு, அருகிலிருக்கும் சுற்றுலா தளங்களுக்கு செல்வது, மது விருந்து என நாங்கள் சந்தோஷத்துடன் அங்கே வாழ்க்கையை கொண்டாடினோம். மிஷ்கின் எனும் ஆளுமை எங்களுக்கு பிதாமகனாக இருந்தார். ஆளை மறைக்கும் பனியில் கையில் தேநீர் கோப்பைகளோடு சுற்றி உதவி இயக்குநர்கள் குழு வெங்கட், சக்தி, அபி, ஈஸ்வரி, நாராயணன், மனோஜ், கிராபியென் ப்ளாக் சூழ்ந்திருக்க நந்தலாலாவின் பாத்திரங்கள் மிஷ்கினின் மூலமாக உயிர் பெற்றன. நான் அந்தக் காட்சிகளை காபிரைட் செய்தேன். பிறகு, அந்தப் படத்தின் திரைக்கதையை சுமார் நான்கு முறை ஒரு வர்ஷன் சுமார் 360 பக்கங்கள் மிஷ்கின் திருத்தி எழுத, நானும் திருத்தி காபிரைட் செய்தேன். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் "நந்தலாலா' படத்திற்காக திருத்தி எழுதப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் அந்தப் படத்தின் திரைக்கதைக்காக நாங்கள் செலவிட்டோம். ஒருமுறை மது விருந்தில் எல்லா உதவி இயக்குநர்களும் சூழ்ந்திருந்தபோது மிஷ்கின் இப்படி சொன்னார்....""மை ஸ்கீரின்பிளே இஸ் பர்ஸ்ட் ரீடர்....ப்ளாக்!''

Comments

Popular Posts