தமிழ் சினிமா... இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது?

கோடம்பாக்கத்தில் நிலைகொண்டிருந்த தமிழ்சினிமா...சாலிகிராமத்துக்கு குடிபெயர்ந்து பின் விருகம்பாக்கம் வழியாக அது போரூர் வரை ஒரு பக்கம் கிளை பரப்பி, வளர்ந்து நிற்கிறது. உதவி இயக்குநர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகியிருக்கிறது. விளைவு என்னவாக இருக்கும் என்றெல்லாம் நாம் மண்டையை போட்டு குடைந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை? தமிழ் சினிமாவில் குப்பையான படங்கள் அதிகரித்துவிட்டன. குப்பை என்று சொல்வது ஒருமுறை கூட பார்க்கத் தகுதியில்லா படங்கள் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் முன்பு அல்லது புறநகர் பகுதிகளில் அரிதாகவே பார்க்க முடிகிற ஷ¨ட்டிங் ஸ்பாட் கேரவேன்கள், லைட்மேன், புரொடக்ஷன் வண்டிகள் இப்போது திரும்புகிற பக்கமெல்லாம் துரிதகதியில் ஓடிக் கொண்டிருக்கின்றன. வடபழனியின் முக்கிய டீக்கடைகளில் அதிகாலையில் படப்பிடிப்புக்கு செல்ல ஒரு பெரும் கூட்டம் காத்து கிடக்கிறது. வண்டிகள் அவசரம் அவசரமாக அவர்களை அள்ளிப்போட்டுக்கொண்டு படப்பிடிப்பு தளத்தை நோக்கி விரைகின்றன. சந்து பொந்துகளில் உள்ள எடிட்டிங் ஷ¨ட் அலுவலகங்களும் தற்போது பிஸியோ பிஸி!

அட என்னய்யா நேர்ந்துவிட்டது தமிழ் சினிமாவுக்கு? என்று சாவகாசமாக நண்பர்களிடம் பேச்சுக்கொடுத்தால்... அடடே ஆரோக்கியமான விஷயமாச்சே இது? என்று மூக்கில், காதில், தலையில் என்று விரல் வைக்கிற அளவுக்கு மேட்டர் இருக்கிறது. சென்னைக்கு சினிமா இயக்குநர் கனவுகளோடு மஞ்சப் பையையோ அல்லது கருப்பு பையையோ தூக்கிக்கொண்டு வந்து வருடகணக்கில் (குறைந்தது 30ல் இருந்து 40 வருடங்கள்...அதற்குப் பிறகு அவரே உயிரோடு இருக்க மாட்டார்..ஆகையால் அது கணக்கில் எடுத்-துக்கொள்ளப்படவில்லை) எடுபிடி, ஆபிஸ்பாய், அப்ரண்டீஸ், உதவி இயக்குநர், அசோஸியேட் இயக்குநர், இணை இயக்குநர் என்று அவர் ஒரு இயக்குநநாக தன்னை புரோமோஷன் செய்துகொள்ள செவ்வாய் கிரக ஆராய்ச்சியை விட பல மடங்கு சுவாரஸ்யமான... நாரகாசமாக நாட்களை கடக்க வேண்டியிருக்கும்.

தமிழ் சினிமா 70 களில் இயக்குநர் பாரதிராஜா நகரத்து இளைஞர்களை உலவிட்டு இருப்பார்....(இந்த இடத்தில் அந்த பாத்திரங்களை நினைவுக்கு கொண்டு வரவும்) அந்த பாத்திரங்களை 2010 வரை நீங்கள் சாலிகிராமத்தல் நேரிலேயே பார்க்கலாம். அந்த அளவுக்கு பெரிய முன்னேற்றத்தை சந்திக்காத தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள் கடந்து 3 ஆண்டுகளில் முற்றிலும் வேறு ஒரு தமிழ் சினிமாவை உருவாக்கும் முயற்சியில் சப்தமில்லாமல் வெற்றி பெற்றிருப்பதோடு, மாற்றத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
அதிகாலை 9 மணி ஒரு ஜெராக்ஸ் கடை வாசலில் ஒரு இளைஞர் கூட்டம் காத்துகிடக்கிறது. காலை 11 மணி ஒரு எடிட்டிங் ஸ்டூடியோவில் ஒரு கூட்டம் அலைமோதுகிறது. இரவு 9 மணி தியேட்டர் வாசலில் அதே கூட்டம் பரபரப்பாக தாங்கள் பார்த்த படத்தின் நிறை, குறைகளை அலசுகிறது. பின் மோட்டார் சைக்கிளில் பறந்து செல்கிறது. நள்ளிரவு 1 மணி அதே கூட்டம் தங்களது அறையில் அடுத்த 3 நாட்கள் தாங்கள் இயக்கப்போகும் படத்திற்கான காட்சி குறித்து விவாதிக்கிறது. அந்த உதவி இயக்குநர்கள் முகத்தில் ஒரு நம்பிக்கை தெரிகிறது. அவர்களிடம் தங்களது வாழ்க்கை குறித்த ஒரு தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அவர்கள் உறங்கச் செல்கிறார்கள். அதிகாலை 2 மணி. அந்த வளரும் நடிகர் அடுத்த நாள் படப்பிடிப்புக்கான வசன காட்சிகளை மீண்டும் ஒருமுறை கண்ணாடி முன் ஒத்திகை பார்த்துக் கெண்டு உறங்கச் செல்கிறார். அதிகாலை 5 மணி. அந்த வளரும் நடிகர் தன்னுடைய மோட்டார் சைக்கிள் வாகனத்தில் படப்பிடிப்புத் தளத்தை அடைகிறார். படப்பிடிப்பு குழுவினோரு டீ அருந்துகிறார். படப்பிடிப்பு தொடங்குகிறது.

இது ஏதோ ஒரு திரைப்படத்தின் சுருக்கமான ஒன்லைன் ஆர்டர் என்று நினைக்க வேண்டாம். தமிழ் சினிமாவில் கண்ணை விழித்துக்கொண்டு, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெளிவாகப் புரிந்து செயல்படும் புதிய தலைமுறை உதவி இயக்குநர்களின் ஒரு நாள் காட்சியின் சில பக்கங்கள்தான். விருகம்பாக்கமும், சாலிகிராமம் முற்றிலும் வேறு முகத்தை தனக்கு பொருத்திக்கொள்ள ஆயுத்தமாகிவிட்டது நண்பர்களே! காதலில் சொதப்புவது எப்படி, பீட்ஸா, அட்டக்கத்தி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.... இந்தப் படங்களையெல்லாம் நீங்கள் பார்க்கத் தவறியிருந்தால் தேடிப்பிடித்தாவது கிடைத்தால் திருட்டு விசிடியில் பார்த்து விடுங்கள் (நல்ல டிவிடி கிடைத்தால் அது உங்கள் தேடலுக்கு கிடைத்த வெற்றி) இது ஒரு சாம்பிள். சமீபத்தில் வெளியாகி, வசூல்ரீதியாகவும், திரைநுட்ப, கலாபூர்வமாகவும் சிறந்த முறையில் எடுக்கப்பட்ட குறைந்த பட்ஜெட் படங்கள். வருடகணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தயாரிப்பாளர்களிடம் கதைசொல்லி...கதையும் தேய்ந்து, வருடங்களும் தேய்ந்து பின் ஒரு நாளில் அப்படம் வெளியாகி...அப்படி ஒரு படம் தியேட்டரில் வெளியானது என்பதை கூட மக்கள் அறியாமலேயே காணமால் போன படங்களின் கதை பல உண்டு. ஆனால், அந்தக் கதைக்கு என்ட் டைட்டில் போட்டிருக்கிறது புதிய தலைமுறை!

இந்தியாவில்தான் அதிகமாக திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்கிற புள்ளி விபரம் இனி தமிழகத்தில்தான் அதிகமான சிறந்த படங்கள் தயாரிக்கப்படுகின்றன என மாறும் அளவுக்கு தற்போது படத் தயாரிப்புகள் அதிகரித்து விட்டன. ஆனால் இவை எல்லாம் அனுபவம் வாய்ந்த பெரும் திரைப்பட நிறுவனங்களிலிருந்து வெளிவந்தவை அல்ல. மாறாக, முற்றிலும் புதிய நிறுவனங்கள். அந்த நிறுவனங்களை நடத்துபவர்கள் நடிகர்கள், இயக்குநர்கள்...ஆமாம். படத் தயாரிப்பில் இப்போது கோலோச்சுவது நடிகர்களும், இயக்குநர்களும்தான்!

இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது? என்று ஆய்வு கட்டுரையெல்லாம் எழுத வேண்டிய அவசியமில்லை. நல்ல சினிமாவை படைக்க வேண்டும் என்கிற வேட்கையுள்ள இயக்குநர்களின் வருகையும், சினிமாவுக்கான தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறி பெரும் தயாரிப்பு செலவை குறைத்து இருப்பதும்தான். அதைவிட முக்கியமான காரணம், கேரவேன் கேட்டு அடம்பிடிக்காத புதிய தலைமுறை நடிகர்களின் வருகை. இதையெல்லாம் விட ஆரோக்கியமான விஷயம்.. திருட்டு விசிடியில் தரமான படங்களை பார்க்க மாட்டோம் என்று ரசிகர்களின் மனோபாவம் மாறியதும்தான்! இந்த மாற்றத்துக்கு யார் பிள்ளையார் சுழி போட்டார்கள் என்று விளக்கமாக பாரா பிரிக்காமல், நேராகவே விஷயத்திற்கு செல்வோம். தரமான படங்களை தியேட்டரில் சென்று மக்கள் பார்க்க மிக முக்கியமான காரணிகள் சிலவற்றை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். சினிமா வட்டாரங்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் மௌத் டாக் ஒரு காரணியாக இருந்தாலும், பேஸ்புக், டிவிட்டர், ப்ளாக்ஸ் போன்ற சமூக வலைதளங்களின் அசூர வளர்ச்சிதான் இதற்கெல்லாம் அடிப்படையான விதை என்பதை யாரும் மறுத்து எழுதவோ, பேசவோ முடியாது!

குறிப்பாக, பேஸ்புக்கில் ஒரு படத்துக்கு கிடைக்கும் உட்சபட்ச வரவேற்பு மௌத் டாக்கையே மிஞ்சும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது. பெரும் படத்தயாரிப்பு நிறுவனமோ, சிறிய பட்ஜெட் தயாரிப்போ எதுவாக இருந்தாலும் நடுநிலையோடு படத்தின் முதல் பாதியிலேயே படத்தின் வெற்றி, தோல்வியை அக்கு வேறாக, ஆணி வேறாக அலசுகிறது
இளைய தலைமுறை...(இதில் விதிவிலக்குகளும் அடங்கும்) விளைவு, படத்தின் முதல்காட்சி ஒரு மணி நேரத்தை கூட தாண்டாத வேளையில் படம் குறித்த விமர்சனத்தை ஒரு லட்சம் பேரிடம் படம் பார்க்கும் ஒருவரால் கொண்டு சேர்த்து விட முடிகிறது. இதில், சில ஆபத்துகளும் உள்ளதை நாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.! முன்பு நடிகர்கள் ஒரு படத்தில் நடிப்பது என்பதை மட்டுமே பிரதான தொழிலாக வைத்திருந்தார்கள். சிலர் முடிந்தால் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி அத்தோடு சினிமாவை விட்டே காணாமல் போவது, அல்லது ரீ-என்ட்ரி கொடுத்து மீண்டும் இழந்த சொத்தை சேர்க்க போராடுவது என்று இருந்தார்கள். ஆனால், புதிய தலைமுறை நடிகர்களோ இந்த மோசமான விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் புதிய வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழ்சினிமாவில் படத் தயாரிப்புக்கு ஒருவர் போடும் முதலீடு, அவரே பலமுறை தவறு செய்தால் மட்டுமே நஷ்டத்தில் கொண்டுபோய் சேர்க்கும். அல்லது புரொடியூசர் என்பவரது அடிப்படையான வேலைகளை கூட தெரியாதவர் படத்தயாரிப்பில் இறங்கினால் மட்டுமே அவரால் தோல்வியடைய முடியும். ஆனால், இந்த இரண்டு காரணங்கள் இல்லாமல் ஒருவர் படத்தை தயாரித்து தோல்வியடையவே முடியாது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். கவனிக்க வேண்டிய மற்றொன்று, அதிகமான லாபம் வேண்டும் என்ற பேராசையில் அனைத்து இடங்களிலும், ஒரு மோசமான திரைக்கதை கொண்ட படத்தை வெளியிட்டாலும், கடவுளாலும் அந்த தயாரிப்பாளரை, தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்ற முடியாதுதான்!

நிற்க. ஒரு படத்தை தயாரித்து, ஒரே இரவில் அம்பானி வீட்டுக்கு பக்கத்து பிளாட்டை வாங்கும் என்ணம் இல்லாத யாரும், ஒரு படத்தை தயாரித்து, முறையான லாபத்தை பெறுவதற்கு ஆயிரமாயிரம் வழிகள் தமிழ் சினிமாவில் உள்ளன. இந்த வழிகளை அல்லது வழிமுறைகளை சரியாக தெரிந்து இருப்பதால்தான் புதிய தலைமுறை படத் தயாரிப்பாளர்கள் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய விஷயம், இந்த தயாரிப்பாளர்கள் ஒரே நேரத்தில் ஐந்து, ஆறு படங்களுக்கு பூஜை போடுவது இல்லை. ஒரு படத்தை தயாரித்து, விநியோகித்த பிறகு அடுத்தப் படம். இதுவே, இவர்களது வெற்றிக்கான பார்முலா. அடுத்து, படத்தை சிறப்பான முறையில் தயாரிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். சினிமா தயாரிப்புக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களில், இயக்குநரும், தயாரிப்பாளரும் தலைவைத்து கூட படுப்பதில்லை...பார்ப்பதில்லை! பின் எப்படி வெற்றி பெறாமல் இருக்க முடியும்?

தயாரிப்பில் புதிய அணுகுமுறை வந்திருப்பதை பெரிய நிறுவனங்கள் கவனிப்பதாக தெரியவில்லை. அதிரப்பழசான பழைய பார்முலாவையே கட்டிக்கொண்டு பல தயாரிப்பு நிறுவனங்கள் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. அல்லது அந்த வழிமுறை காதுக்கு எட்டினாலும் கூட, இதெல்லாம் கோலிவுட்டுக்கு பொருந்தாது என்று கண்ணை மூடிக்கொண்டு செல்கிறார்கள். தயாரிப்பாளர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகரும், இயக்குநரும் அந்த தயாரிப்பாளரின் தோல்விக்காக கடுமையாக உழைத்துக்கொண்டு தனக்கான குழியையும் வெட்டிக் கொள்கிறார்கள். அந்த பெரும் காமெடி நிறைந்த சோகக் கதையை வேறு ஒரு அத்தியாயத்தில் விவரமாக அலச வேண்டிய சூழலும் நம்மிடையே உள்ளது. ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு பெறும் ஒரு உதவி இயக்குநர் வெற்றியடைய அந்த உதவி இயக்குநரின் நண்பர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். நண்பனின் படம்தானே... என்று தயாரிப்பு செலவை தின்றே தீர்த்துக்கட்டாமல், கவனமாக படத்தின் திரைக்கதையிலும், படப்பிடிப்பிலும் உதவுகிறார்கள். படத்தின் வெற்றி தீர்மானிக்கப்பட்டவுடன் நண்பனின் திரைக்கதைக்காகவும், பட வாய்ப்புக்கும் இயக்குநராக புரமோஷன் பெற்ற உதவி இயக்குநர் நண்பனுக்கு உதவுகிறார். இப்படியாக 5 பேரோ, 6 பேரோ கொண்ட ஒரு உதவி இயக்குநர்களின் குழு தொடர்ச்சியாக படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் இவர்களது கதைகள் இருப்பதில்லை...இவர்களது படங்களுக்கு வால்யூ உள்ள நடிகரும், நடிகையும், ஒளிப்பதிவாளரும் தேவையே இல்லை. ஒன்று மட்டும் போதும். அது, தியேட்டருக்கு வரும் ரசிகனுக்கு ஒரு நல்ல படைப்பை வழங்க வேண்டும் என்கிற முனைப்புதான். அது காமெடியோ, சீரியஸோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...!

முதல் படைப்பில் கொடுக்கப்பட்ட அதே உழைப்பு, ஆர்வம் இன்னும் வெற்றிக்கான எல்லா விஷயங்களை தொடர்ந்து இளைய தலைமுறை நடிகர், இயக்குநர்கள் கடைப்பிடிப்பதும் படத்தின் தொடர் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது. குறைவான பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கதைகளை தேர்ந்தெடுப்பதும், அந்த கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதையை அமைக்கும் போக்கும் வெற்றிக்கான கூடுதல் பார்முலாவாகும். ஒரு படத்திற்கான பட வாய்ப்பை பெற்ற பிறகே, தன்னுடைய படைப்பை திரையில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற இயக்குநர்களின் காலமும் மலையேறியதும் சிறந்த படங்கள் வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்திருக்கிறது. தான் பொத்தி பாதுகாக்கும் அந்த கதை எத்தனை பேருக்கு பிடித்திருக்கிறது. அல்லது எத்தனை பேரின் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது என்பதை ஒரு 30 அல்லது 40 நிமிட -பிலிமுக்குள் சுருக்கி, அதை ஒரு குறும்படமாகவோ, டெலிபிலிமாகவோ பார்த்து விடும் இளைய தலைமுறை... தொழில்நுட்பமும், கதை சொல்லும் முறையில் இன்னும் தேர்ச்சி வேண்டும் என்றால் கூடுதலாக அதற்கு தன்னை தயார்செய்துகொள்ளவும் தயங்குவதில்லை.

சமீபத்தில், சில புதிய தயாரிப்பு நிறுவனங்கள் வேறு ஒரு வழியையும் கையாள துவங்கியுள்ளன. வெற்றிகரமான இயக்குநராகும் கனவோடு உள்ள உதவி இயக்குநர்களுக்கு குறிப்பிட்ட சில லட்சங்களை ஒதுக்கி, அதை குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் கதையை படமாக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு அளிக்கவும் முன்வந்துள்ளன. அந்த வாய்ப்பை உதவி இயக்குநர் சரியாக பயன்படுத்தி, குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்துவிட்டால், அந்த உதவி இயக்குநருக்கு அந்த நிறுவனத்தில் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைக்கும். சின்னத்திரையில் வெற்றிகரமான நடிகராக கோலோச்சிய விஜய் ஆதிராஜ் துவக்கியிருக்கும் பட நிறுவனம் மற்றும் புகழ்பெற்ற, புதிய பட நிறுவனங்கள் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளன. படத்தின் கதை நிறுவனத்துக்கு பிடிக்கவில்லையென்றாலும், அந்த உதவி இயக்குநருக்கு படம் இயக்கும் வாய்ப்பு பறிபோவதில்லை. சிறந்த சிறுகதைகளை படமாக்கும் வாய்ப்பும், கதையை அவர் ஒழுங்குப்படுத்திக்கொள்வதற்கான உதவிகளும் பட நிறுவனங்களால் கொடுக்கப்படுகின்றன. தோல்வி அடையாமல் விடமாட்டேன் என்று அவர் விடாப்பிடியாக இருந்தால்தான்...அவரால் இயக்குநராகாமல் தப்பிக்க முடியும்!

விஜய் ஆதிராஜ் துவங்கியிருக்கும் பட நிறுவனத்தில் 50 நிமிடத்தில் ஒரு கதையை சொல்ல சில லட்சங்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அத்ததைகய உதவி இயக்குநர் இயக்கும் படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள். ஆதியின் அலுவலகத்துக்குள் ஒரு பெரும் இளைய தலைமுறை பட்டாளம் உற்சாகமாய் கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒரு படத்தை இயக்கி, இந்த சமூகத்தின் முன் தன்னை ஒரு இயக்குநராக நிலைநிறுத்திக் கொள்ள இதைவிட வேறு என்ன வேண்டும்? கமர்ஷியலோடு கூடிய தரமான படத்தை இயக்கிய லிங்குசாமி, பசங்க படத்தின் மூலம் கவனம் பெற்ற பாண்டிராஜ், நடிகருக்கான இலக்கணங்களை உடைத்து தனக்கான இடத்தை பிடித்த தனுஷ், அறிமுகமாகி மக்கள் மனங்களுக்குள் தனக்கான இடத்தை தேடும் விஜய் சேதுபதி போன்றோர்கள் அடுத்தடுத்து படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார்கள். லிங்குவும், பாண்டிராஜூம் வெற்றிக்கனியை கையில் வைத்திருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் தற்போது கூலிங்கிளாஸ் புகழ் இயக்குநர் மிஷ்கினும் சேர்ந்திருக்கிறார். வுல்ப் அலோன் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நண்பர்களே...இந்த தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் நடிக்கும் எல்லோரும் டூ விலரில்தான் படப்பிடிப்புக்கு வருகிறார்கள்... நல்ல ஆடி கார் வாங்கும் ஆசையில் இல்லை...ஆஸ்கர் வாங்கும் கனவுகளோடு!

Comments

Popular Posts