கதை எழுது - 17

1. சிறுகதையொன்றின் தரத்துக்கு ஒரு சிறிய பரிசோதனை. கதை வாசகர்களின் மனத்தைக் கவ்விக்கொள்கிறதா, அட்டை மாதிரி? அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடிகிறதில்லை, வைத்துவிட்டாலும் மறக்கமுடிகிறதில்லை, என்று வாசகனை அப்படி ஆட்டி வைக்கிறதா? இந்தக்கதைக்குப் படம் எதற்கு விளம்பரம் எதற்கு என்று தோன்றுகிறதா? அப்பப்பா வாழ்கையில் அற்புதம் இத்தனையா என்று வியக்க வைக்கிறதா? அணுவை அண்டமாகவும், அண்டத்தை அணுவாகவும் மாற்றுகிறதா? கண்ணீர் விடவேண்டிய கட்டத்தில் ஆனந்த சிலிர்ப்பையும் மகிழ்ச்சியின் சிகரத்தில் கண்ணீரையும் தருகிறதா? சிறிய ஒரு விஷயம் பெரியதொரு உண்மையாகி விடுகிறதா? அப்படியானால் அடுத்தபடியான ஆராய்ச்சிக்கு அந்தச் சிறுகதை தகுதி பெற்றுவிட்டது.
2. இலக்கிய ஆசிரியனின் "டெக்னிக்", விமர்சனத்துக்குப் பாத்திரமாகிறது. கதை மட்டில்
"சப்"பென்று தூங்கிவழிந்து கொண்டிருந்தால் "டெக்னிக்"கின் புதுமை யாரைக் கவரப்போகிறது? சமையல் நன்றாயிருக்கலாம், உப்பு மட்டும் இல்லாவிட்டால்? டெலிவிஷனில் புதுமை இருக்கிறது. "டெக்னிக்" ஒன்றும் மட்டமில்லை. ஆனால் பொய்ச் சிரிப்புக் காட்டும் அந்த முகத்தை எத்தனை நாள் சகித்துக் கொள்கிறது? சில வேளைகளில் 'பொய்க்கால்" குதிரை ஆடுகிற சிறுவன் போடுகிற போடு எப்படி இருக்கிறது? அவன் உற்சாகமும்., பெருமிதமும் நம்மையுமல்லவா பிடித்துக்கொள்கிறது?
அவன் "டெக்னிக்" மிகப்பழையது. உற்சாகமோ மிகமிகப் புதியது!
3. சிறுகதை ஆசிரியன் வாசகனின் ஒரு தோழன் மாதிரி. சில வேளைகளில் அந்தத் தோழமை அற்புதமாகி விடுகிறது. வாழ்க்கைச் சகதியின் நடுவில் நின்றுகொண்டே, காணாதனவெல்லாம் காட்டி, தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறான்.ஆனால் சில வேளைகளில், ஊட்டி என்றும் கொடைக்கானல் என்றும் அழைத்துப் போனாலும் அங்கேயும் நம்மை "போர்" அடிக்கிறான். கொட்டாவி விட்டுக்கொண்டு காசு செலவழித்த உணர்ச்சியோடு திரும்புகிறோம். இப்பேர்ப்பட்ட தோழமை என்றும் வேண்டாம்! 'போர்" அடிக்கிற சிறுகதை உங்களுக்கு வேண்டாம்! அதைக் கீழே வைத்துவிடுங்கள்!

Comments

Popular Posts