திரை - 6

ந்திய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களை உருவாக்கிய பெருமையை பெரும்பாலும் சென்னை - தரமணியில் அமைந்துள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியே தட்டிச் செல்லும். இங்கு பயின்ற ரவிவர்மா, அசோக் குமார், நிவாஸ், பி.சி.ஸ்ரீராம், சரோஜ்பாடி, ராஜீவ் மேனன், தங்கர்பச்சான், ரத்னவேலு, ஆர்தர் வில்சன், ஆர்.டி.ராஜசேகர், ஏகாம்பரம் போன்றவர்கள் இந்தியாவின் அனைத்து மொழிப் படங்களிலும் தங்களது முத்திரையை பதித்தனர். தமிழ் சினிமாவில் சமீபத்தில் சிறந்த ஒளிப்பதிவாளராக அடையாளம் காணப்பட்டிருக்கும் மனோஜ் பரமஹம்சா கூட திரைப்படக் கல்லூரி உருவாக்கிய ஆளுமைதான். இக்கல்லூரியின் சிறப்பம்சமே தொழில்நுட்பத் துறையில் இயக்கம் தவிர்த்து மற்ற அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் மிகச் சிறந்த பல ஆளுமைகளை இந்திய சினிமாவிற்குப் பெற்றுத் தந்திருப்பதுதான். திரைப்படத்துறை தவிர்த்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர துறைகளிலும் இங்கு பயின்ற மாணவர்கள்தான் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் சயின்டிஃபிக் ஆபிசராக பல வருடங்கள் வேலைப் பார்த்தவர் எம்.என்.ஞானசேகரன். திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் (1972-லிருந்து 1975 வரை) பயின்ற மாணவர். சிறந்த விளம்பரப் பட இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் அடையாளம் காணப்பட்டிருக்கும் ராஜீவ் மேனனின் "மைண்ட் ஸ்கிரீன்' நிறுவனத்தின் திரைப்படக் கல்லூரிக்கு (இங்கு ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை ஆகிய இரு பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன) டீனாக இருக்கிறார் ஞானசேகரன் ( திரைப்படக் கல்லூரியில் சில காலங்கள் இவர் ஆசிரியராக இருந்தபோது இவரிடம் பயின்ற மாணவர்தான் ராஜீவ்மேனன். இவரின் கற்பித்தல் திறனை கண்டு வியந்த அவர், தன்னைப்போலவே திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள மற்ற மாணவர்களுக்கும் பயன்பட வேண்டுமென்று எண்ணியே திரைப்படக் கல்லூரியைத் துவக்கி, தன்னுடைய ஆசிரியரையே அதற்கு தலைமைப் பொறுப்பை வகிக்கவும் வழி செய்திருக்கிறார் ராஜீவ்மேனன் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்). ஒளிப்பதிவை எல்லாத் துறையோடும் சம்பந்தப்படுத்தி அதன் சிறப்பை மாணவர்களுக்கு எளிய முறையில் பயிற்றுவிக்கவும், கேமராவை முழுவதுமாக பிரித்துப் போட்டு, விரைவாக அதனை ஒன்று சேர்த்து இயக்கவும் தெரிந்தவர் என்பதும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இவர் உருவாக்கிய சிறப்பு வகை அதிவேகமாக படம் பிடிக்கும் ஒளிப்பதிவுக் கேமராவைத்தான் தற்போதும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்பதும், படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவுக் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் ராஜீவ் மேனன் தொடர்பு கொள்ளும் முதல் நபரும் இவர்தான் என்பதும் இவரின் திறமைக்கு சான்றுகளாக பலரும் குறிப்பிடுகின்றனர். பலருக்கும் தெரியாத ரகசியம் ஞானசேகரனுக்கு நன்றாக வரையவும், சிற்பத்தில் ஈடுபாடும் உண்டு என்பதுதான்! கோடையின் கத்தரி வெயிலில் சென்னை பெருவாழ் மக்கள் நொந்து நூடுல்ஸôகிப் போயிருந்த நேரத்தில் திடீரென ஒரு தென்கிழக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நடுக் கடலில் உருவாகி (அதற்கு "லைலா புயல்' என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் பெயரிட்டிருந்தது) இரண்டு நாட்கள் அடை மழையால் தாலாட்டிய அந்த இரண்டு தினங்களுக்கு முதல் நாள்தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. சென்னை - மைலாப்பூரில், டாக்டர் ரங்காச்சாரி ரோட்டில் காலாற நடந்து கொண்டிருந்தோம். வாகனப் போக்குவரத்து நெரிசலின்றி சாலை அமைதியாக இருந்ததும், சாலையின் ஓரம் நின்றிருந்த மரங்கள் வெள்ளை நிறப் பூக்களை சாலையின் மீது தெளித்து தன் நேசத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்ததும் அதுவரை இருந்த மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் தூக்கி வெளியே எறிந்தன. நம்மீதும் சில பூக்கள் விழுந்தது இயற்கையா நிகழ்ந்ததா? நிகழ்த்தப்பட்டதா? என்ற கேள்வி மனதிற்குள் எழுந்ததை உற்றுக் கவனித்தபடியே கன்னியம்மன் கோவில் தெருவை அடைந்தோம். புதிய எண். 4-ல் மிக கம்பீரமாக நின்று கொண்டிருந்தது "மைண்ட் ஸ்கிரீன்' நிறுவனம். சில நிமிடங்களில் குளிரூட்டப்பட்ட அறையில் நாம் எண்ணி வைத்திருந்த பிம்பத்திற்கு நேர் எதிராக வந்து அமர்ந்தார் ஞானசேகரன்! வியப்பிலிருந்து கண்கள் அகலுவதற்குள் மாணவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு சந்தேகங்கள் கேட்க, சிறிது நேர காத்திருத்தலுக்குப் பிறகு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

""சென்னை - சிந்தாதரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன். அப்போது என்னுடைய குடும்ப சூழல் காரணமாக எந்தத் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்கிற மனக் குழப்பம் என்னிடம் இருந்தது. படிப்பு முடித்தவுடன் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற உந்துதல் எனக்குள்ளே இருந்து வந்தது. டிப்ளமோ இன்ஜினியரிங் கோர்ஸில் சேர்ந்து படிக்கலாம் என்று முடிவு செய்து, தரமணியிலுள்ள மைய்ய பல் தொழில்நுட்ப கல்லூரிக்குச் சென்று அப்ளிகேஷன் வாங்கிவர போனபோது, அப்படியே தரமணி திரைப்படக் கல்லூரி பக்கமும் நான் எட்டிப்பார்க்க நேர்ந்தது. அந்தக் கல்லூரிக்குள் சென்று விசாரித்தபோதுதான் இதுவரை நான் திரையில் பார்த்துக்கொண்டிருக்கும் படத்தைப் பற்றிக் கூட பாடங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டேன். அப்படி விசாரிக்கும்போது ஒளிப்பதிவு (சினிமாட்டோகிராஃபி) துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அந்தப் படிப்பை எடுத்துப் படித்தால் நமக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முடிவு செய்துதான் திரைப்படக் கல்லூரியிலும் அப்ளிகேஷனை வாங்கி வந்தேன். மற்றபடி ஒளிப்பதிவு துறையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்றோ, அதன் மீதுள்ள ஈடுபாட்டாலோ நான் ஒளிப்பதிவுப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும். என் நினைவு முழுக்க, படித்துவிட்டு வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டும்தான் அப்போது இருந்தது! கல்லூரியில் நேர்காணல் வைத்துத்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால் அதற்காக என்னை தயார் செய்து கொள்ள ஆரம்பித்தேன். சிற்பத் துறையில் எங்கள் குடும்பம் புகழ் பெற்றது என்பதால் பல சிற்பிகளோடு என்னுடைய அப்பாவிற்கு நட்பு இருந்தது. அந்த வகையில் பல சிற்பிகள் என்னுடைய அப்பாவை வந்து சந்தித்து செல்வதுண்டு. அந்த வகையில் சென்னை - எழும்பூர், அரசு கவின் கலைக் கல்லூரியில் இருந்த சிற்பி தனபால் ஸôரையும், சிற்பி தட்சிணாமூர்த்தியையும் சென்று சந்தித்தேன். அவர்கள் ஆலோசனையின் பெயரில் கன்னிமரா நூலகத்திற்குச் சென்று புகைப்படம் சம்பந்தமான புத்தகங்களைத் தேடிப் படித்தேன். அப்போது திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவு பிரிவில் ஆசிரியராக இருந்த கே.லோகநாதன் ஸôரின் மூலமாக புகைப்படக் கலை (ஆஹள்ண்ஸ்ரீ ர்ச் ல்ட்ர்ற்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ்)யின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டேன். திரைப்படக் கல்லூரியில் என்னை நேர்காணல் செய்தவர்கள் திரைப்படத் துறையில் "பராசக்தி', "சர்வர் சுந்தரம்' போன்ற படங்களை இயக்கி, தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்திய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு அவர்கள்தான்! நேர்காணலின்போது நான் வேகமாக வரைந்த ஓவியத்தைப் பார்த்து சந்தோஷமும், புன்னகையும் பூத்த இந்த இரட்டையர்கள்தான் என்னை ஒளிப்பதிவு பிரிவுக்கு தேர்வு செய்தனர். அப்போது கல்லூரியின் முதல்வராக சிவதாணு பிள்ளை பொறுப்பு வகித்தார். கல்லூரியில் நான் பயின்ற அதே சமயத்தில்தான், சமீபத்தில் ஓய்வுபெற்ற அரசு தணிக்கைக் குழு அதிகாரியான பாபு ராமசாமி, இந்திய திரைப்படக் தணிக்கைக் குழுவின் இணை இயக்குநரான சந்தானம் (படப் பதனிடுதல்), இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.ஆர் (படப் பதனிடுதல்), ஒளிப்பதிவாளர்களான தர்மராஜ் (ஒளிப்பதிவு), நல்லூசாமி (ஒளிப்பதிவு), பெருமாள் (ஒளிப்பதிவு), ஏ.எஸ்.ஏ.சாமி (இயக்கம்), லோகநாதன் (ஒலிப்பதிவு), அருண்மொழி (ஒளிப்பதிவு) போன்றவர்களும் பயின்றனர். கல்லூரி விடுதியில் அருண்மொழியும், நல்லூச்சாமியும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். அந்த சமயத்தில் கல்லூரிக்கு அதிகாலையிலேயே வந்துவிடுவேன். நான் வந்து அறைக் கதவைத் தட்டிய பிறகே அவர்கள் எழுந்திருப்பார்கள். நாங்கள் ஒரு தேநீரை அருந்திவிட்டு சினிமாவின் தொழில்நுட்ப விஷயங்களைப் பேச ஆரம்பித்து விடுவோம். அதேப்போல் கல்லூரியில் எனக்கு மட்டுமின்றி பலருக்கும் நெருக்கமான நண்பராக அருண்மொழி இருந்தார். அதற்குக் காரணம், கல்லூரியின் பாடம் சம்பந்தமான பல ஆய்வேட்டை அவர்தான் எழுதிக் கொடுப்பார். அவரே முன்வந்து சக மாணவர்களுக்கு உதவி செய்வார். இந்தப் பழக்கம் அவரிடம் இன்றுவரை பலருக்கு திரைக்கதை எழுதித் தருவதிலும் ப்ண்ந்ங் ஹ ள்ஸ்ரீழ்ண்ல்ற் க்ர்ஸ்ரீற்ங்ழ் ஆகவும் பணியாற்றுவதிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. முதலாமாண்டில் படிக்கும்போது கல்லூரி வளாகத்திற்குள் புதியதாக ஒரு கட்டிடம் கல்லூரி மாணவர்களுக்காக கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை 16ம்ம் ஙர்ஸ்ண்ங் ஸ்ரீஹம்ங்ழ்ஹ வால் நான்தான் படம் பிடித்தேன். கல்லூரியில் நான் சமர்பிக்க வேண்டிய ஆவணப்படத்திற்கு "அரசு கவின் கலைக் கல்லூரி'யை எடுத்தேன். இறுதி வருட புராஜெக்ட் ஃபிலிமாக "சேற்றில் முளைத்த செந்தாமரை (பட்ங் க்ஷப்ர்ள்ள்ர்ம்ள் ண்ய் ற்ட்ங் க்ன்ள்ற்)' படத்திற்குத்தான் நான் ஒளிப்பதிவு செய்தேன். இந்தப் படத்தை பாபு ராமசாமிதான் இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவு மாணவராக கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கல்லூரியில் பல மாணவர்கள் சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்திருந்தார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி கல்லூரியில் சிறந்த ஒளிப்பதிவு மாணவனாக நான் தேர்வானது எனக்கு சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது. அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருந்தால் யாரும் தங்கள் துறையில் வெற்றியடையலாம் என்பதை அப்போது அறிந்து கொண்டேன். மூன்றாண்டுகளுக்குப் பிறகு கல்லூரியை விட்டு நான் வெளியே வந்தபோது என் மனநிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அதில் முதலாவது, படிப்பை முடித்தவுடன் உடனே நான் எந்த வேலைக்கும் முயற்சிக்கவில்லை. இரண்டாவது,என் மனம் தொடர்ந்து சினிமாவில் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தது!

Comments

Popular Posts