கதை எழுது - 47

1. எழுத்தாளனுக்குரிய அடிப்படைக் குணம் எல்லோரிடமும் கலந்து பழகத் தெரிவது தான். தன்னை, வாழும் உலகினின்று பிரித்துக் கொண்டு வாழ முற்படும் ஒருவனால் இவ்வுலகை, இன்பமான இந்த(எக்ஸிஸ்டென்ஸ்) இருக்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?
2. எழுதுவதற்கு அடிப்படையானது ஒரு உத்வேகந்தான். எழுதுபவன், படைக்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டியதுதான் அடிப்படைத் வேவை. மரபு வழிப்படி இலக்கியங்களைப் படித்துவிட்டுத்தான் எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. "இண்டென்ஸ் பீலிங்" எனும்படியான சிரத்தை தேவை. குறையற்ற ஆழமான உணர்ச்சித் திளைப்பில் தான் படைப்பிலக்கியத்தின் கரு உதிக்கிறது எனலாம்.
3. பலசமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும்போது நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலை கொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப் பந்தயமல்ல. நூறு கஜ ஓட்டப் பந்தயத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர வேடிக்கை
பார்த்துக் கொண்டு செல்லவோ, வேகத்தை மாற்றிக் கொள்ளவொ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக அவசியம். வளவளப்பு என்றால் அதிகச் சுமை. ஓடுவது கஷ்டம்.
4. சிறுகதை எழுத உக்திகளைச் சொல்லித் தரலாம். உணர்வில் தொய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும், முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. செக்காவின் உக்திக்கு ஒரு அச்சு தயார் செய்து கொண்டு, அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும் தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஒரு உருவம் கிடைக்கும்.
5. தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்தி பெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும்.
6. எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடியவேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையை கடந்தால் ஒருமைக் கோப்புக்கும் ஊறு விளையத்தான் செய்யும்.
7. செக்காவ், மாப்பசான், போ, மாம், தாகூர், கு.ப.ரா, புதுமைப் பித்தன், லா.ச..ரா, ஸீன்ஓகாளி, ஜாய்ஸ், ஸ்டீக்ஷிபன்கிரேன், ஹென்ரிஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறுசிறுகதை ஆசிரியர்களைப் படித்தால் சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்யக்கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்யம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் என்பதும் இந்தக் கதைகநிளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத் தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற்போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம்: பூசினாற்போலவும் விழலாம். அது விளகின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத்தைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில் உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத் தன்மை பெறும்பொது உருவமும் தானாக ஒருமைப் பாட்டுடன் அமைந்து விடுகிறது.
8. உணர்ச்சியின் தீவிரத்தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதற்கில்லை. அது ஒவ்வோர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும் தன்மை. எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்கிறார்கள். எழுத்து தொழிலாகி பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழகிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.

Comments

Popular Posts