சினிமா - 7

(கடைசிப் பாடல்)

வாழ்க்கையில் மகத்துவமான எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் மனித மனம் கண்டு கொண்டுவிட்டாலோ அல்லது கண்டு கொள்ளத் தெரிந்து விட்டாலோ சந்தோஷத்தின் நிரந்தர வீட்டில் நாம் வசித்துக் கொண்டிருக்கலாம். வாழ்க்கையின் போக்கில் நிகழும் சந்திப்புகள் கவனத்திற்குரியவை. வாழ்வின் பெரும் சுமைகளை இறக்கி வைத்து, இளைப்பாற நட்பின் கரங்களும், தோள்களும் மட்டுமே எப்போதும் துணை நிற்கின்றன. நட்பின் கரம் பிடிக்க சந்திப்புகள் அவசியமாகின்றன. சதா பொருளைத் தேடி அலையும் உலகில் வாழ்வை ரசிக்க, சரியாக சொல்வதென்றால் தரிசிக்க சந்திப்புகளும், அதனைத் தொடர்ந்து நிகழும் அனுபவங்களுமே காரணமாயிருக்கின்றன. மழை பெய்து ஓய்ந்த நன்னாளின் இரவில் அகண்ட வான்வெளியில் தனித்துத் தெரியும் நிலவை ரசிக்கும் கவிஞனின் மனவுலகைப்போல, வாழ்வு ரசனைக்குரியதே! எதன் போக்கில் சந்திப்புகள் நிகழ்கின்றன? சந்திப்புகளின் மூலகர்த்தா யார்? ஏதோ ஒரு சமயத்தில் அல்லது சூழலில் சரியான சந்திப்பு நிகழ்ந்திருந்தால் நமது வாழ்க்கையின் பயணமும் மாறியிருக்கும் அல்லவா? சந்திப்புகள் நிகழாததுனாலேயே நாம் பல அரிய தருணங்களைத் தவற விட்டிருக்கிறோம். தேடலின் விளைவாகத்தான் சந்திப்புகள் நிகழ்கின்றனவோ? தேடல் கொண்ட மனம் எதிலும் நிலைத்து நின்று விடுவதில்லை. வாழ்வின் ருசியைத் தேடியலையும் தேசாந்திரியைப்போல சதா அது அலைந்து கொண்டேயிருக்கிறது! அலைந்து திரிதலில்தான் வாழ்க்கையின் மகத்துவம் இருக்கிறதோ? கதம்ப அனுபவங்கள் திரிதலில்தான் நிகழ்கின்றன. சமூகம் அலைந்து திரிதலை அனுமதிக்கிறதா? நடுநிசியில் நகரத்தின் பேரழகை ரசிக்க எத்தனை மனம் தூக்கத்தை உதறியிருக்கிறது? வீதிகளும், சாலைகளும் மெüனத்தின் அழகைப் போர்த்திக்கொண்டு விழித்திருக்கும் இரவுகளைக் காண கண் கோடி வேண்டும் என்று கவிஞர்கள் சொல்வார்களே! யாரேனும் அதைக் கண்டிருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியுமா உங்களது வீதியின் அழகு? பின்னிரவில் அது இசைக்கும் தேவகானத்தை உங்களது செவி கேட்டிருக்கிறதா? நீங்கள் அதன் ஸ்ருதி லயத்தில் அமிழ்ந்து உங்களை இழந்திருக்கிறீர்களா? தன்னை இழந்தவர்களுக்குத் தெரியும். உங்களுக்கு? ரசிப்பதில் இருக்கிறதா இல்லை உணர்தலில் இருக்கிறதா இரவின் பேரழகு? பெண்ணுக்கும், இரவுக்கும் இடையே ஒரு கவித்துவமான பேரொற்றுமை இருப்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா நண்பர்களே? பேரானந்தத்தைத் தங்களுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டும் அவர்களது விசித்திரத்தை உங்களது மனம் அசைபோட்டிருக்கிறதா? இதன் எல்லாவற்றிக்கும் உங்களிடம் பதில் இருக்கிறதா? ம்ம்ம்... மெல்லிய புன்முறுவல் பூக்கிறீர்களா? சந்தேகமேயில்லை நீங்கள் கலைஞனேதான்! கலைகளில் மிக உயர்ந்தது என்று "கவிதை'யை குறிப்பிடுவார்கள் பெரியோர்கள். கவிதையை முதன்மைப்படுத்துவதற்குக் காரணம் அது எல்லையில்லா பெரும் கனவை நமக்குள் உருவாக்கிக் கொண்டே இருக்கும் என்பதால்தான்! கவிதையின் மயக்க வரிகளில் தன்னை மறந்த மனங்களின் கொண்டாட்டத்தை இலக்கியத்தின் எல்லாப் பக்கங்களிலும் நாம் கண்டு கொள்ளலாம். "துயர்மிகுந்த வரிகளை இன்றிரவே எழுதலாம்...' என்று தனது கவிதையின் வழியே வாழ்வின் துயரத்தையும், பேரின்பத்தையும் பதிவு செய்தாரே கவிஞர் பாப்லோ நெருடா! எத்தனை சத்தியமிக்க வார்த்தைகள்! ஓராயிரம் ஆண்டுகளானாலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே! கவிஞனின் வார்த்தைகள் மட்டும்தான் துருப் பிடிப்பதேயில்லை. மனங்களின் வழியே தொடர்ந்து அவனுடைய எழுத்து கடந்து கொண்டேயிருக்கிறது. எழுத்து மனிதனை சுத்தப்படுத்துகிறது. தன்னையும் சுத்தமாக்கிக் கொள்கிறது. பாரதி என்றொரு பாட்டன் நமக்கு பொக்கிஷமாய் கிடைத்தாரே! சமூகத்தின் அவலங்களை தன் எழுத்தினால் விரட்ட விரட்ட அடித்த நம் பாட்டனை நாம் ஏன் தவற விட்டோம்? கவிஞனின் எழுத்தைக் கொண்டாடுவதைப் போல, கவிஞனை நாம் ஏன் கொண்டாடுவதில்லை? எப்போது நாம் கலைஞனைக் கொண்டாடுகிறோமோ? அப்போதுதான் நம் வாழ்க்கையும் கொண்டாட்டமாக அமையும்.

பிரபல கவிஞன் ஒருவன் வாழ்க்கையில் கடன் பிரச்சினையால், தனது புகழையும், குடும்பத்தையும் இழந்து தவிக்கிறான். அவனால் ஒரு வாடகை வீட்டில் கூட வசிக்க முடியாத நிலையில் வறுமை அவனை துரத்தி நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்துகிறது. தன் வீட்டின் வாடகைத் தொகையை கட்டுவதற்காக நண்பன் ஒருவனிடம் கடன் கேட்டு, தனியார் பூங்கா ஒன்றில் அவனுக்கு காத்திருக்கிறான். இருட்டத் தொடங்கிய பிறகும் கூட அவன் வரவேயில்லை. வீட்டிற்குத் திரும்பிச் செல்ல இயலாத நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு அவன் "கடைசிப் பாடல்' என்னும் கவிதையை எழுதத் தொடங்குகிறான். அப் பூங்காவை இரவு பூட்ட வேண்டிய பொறுப்பு அப்பூங்காவில் அமைந்திருக்கும் கேன்டீனில் வேலை பார்க்கும் சமையல்காரனுக்கு இருக்கிறது. சமையல்காரன், அக்கவிஞனை வெளியே போகச் சொல்லும்போது கவிஞன், முகத்தைப் பொத்திக்கொண்டு அழத் தொடங்குகிறான். பிரச்சினையை புரிந்து கொள்ளும் சமையல்காரன் இரவைக் கழிப்பதற்கு தான் வேலைப் பார்க்கும் கேன்டீனில் அடைக்கலம் தருகிறான். சமையல்காரனுக்கு கவிதை மீது மரியாத உண்டு என்பதால் அவன் கவிஞனுக்கு உதவ முன் வருகிறான். அன்றிரவு இருவரும் தங்களது வாழ்க்கைக் குறித்து மனம் விட்டுப் பேசிக் கொள்கிறார்கள். சமையல்காரன் தனது கிழிந்த வெள்ளை நிற குர்தாவை அணிந்து கொள்வதை கவனிக்கும் கவிஞன், ""உனக்கு இந்த ஆடைப் பிடித்திருக்கிறதா? இதை அணிந்தவுடன் நீ கவிஞன் மாதிரியே இருக்கிறாய்'' என்கிறான். பிறகு இருவரும் உறங்கச் செல்கிறார்கள். விடிந்தவுடன் கவிஞனுக்கு தன்னுடைய பணத்தை கொஞ்சம் கொடுத்து உதவி செய்கிறான் சமையல்காரன். பணத்தைப் பெற்றுக்கொள்ளும் கவிஞன், தஞ்சாவூரில் நடக்கும் விழா ஒன்றிற்கு புறப்பட்டுச் செல்கிறான். அங்கே ரூபாய் பத்தாயிரத்திற்கான பரிசு அவனுடைய படைப்பிற்குக் கிடைக்கிறது. சமையல்காரனுக்கு இச்செய்தியை அலைபேசியில் தெரிவிக்கும் கவிஞன், சீக்கிரம் அவனை சந்திப்பதாகவும் கூறுகிறான். சில நாட்களுக்குப் பிறகு திரும்பி வரும் கவிஞன் அந்த சமையல்காரன் குறித்து கேன்டீன் மேனேஜரிடம் கேட்க, அவரோ சில நாட்களுக்கு முன்பு கேஸ் சிலிண்டர் வெடித்து இறந்து போய் விட்டதாக கூறுகிறார். இதைக் கேட்கும் கவிஞன் வெடித்து அழுதபடி, தான் கொண்டு வந்த குர்தாவில் முகம் புதைத்து அழுவதோடு படம் நிறைவடைகிறது.
தேசாந்திரியாய் திரியும் கவிஞன் ஒருவனுக்கும், சமையல்காரனுக்கும் இடையேயான உறவை, ஆழமான நட்பை அவ்வாழ்வின் குரூரத்தை மிக இயல்பாகத் திரையில் சொல்லிச் செல்லும் படம்தான் "கடைசிப் பாடல்'. கவித்துவமான தலைப்பைக் கொண்டிருக்கும் இப்படம் ஒரு கவிஞனின் மனப்போக்கை, அவனுடைய வாழ்வியல் சூழலை, வாழ்ந்தே தீர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. சமையற்காரனின் பணிச் சூழலிடையே கசியும் அன்பின் வெளிப்பாட்டில் திக்கித் திணரும் கவிஞனின் இரவுகளை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது படம். ""ஆசையையும் காட்டிட்டு ஆப்பும் வைச்சிட்டான் என் நண்பன்...'' என வெடித்து, வெம்மியழும் கவிஞன் வடபழனி விஸ்வநாதன் பாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கும் இயக்குநரும், ஆவணப்பட இயக்குநருமான அருண்மொழி, சமையல்காரன் விரும்பிய குர்தா ஆடையை கையில் வைத்துக்கொண்டு கதறும் காட்சியில் நம் இதயத்தையும் அசைத்து பார்த்து விடுகிறார். நடிகருக்கான உடல்மொழியும், வசன உச்சரிப்பும், வெகுளித்தனமும் இயல்பாகவே அருண்மொழியிடம் இருப்பதால் இப்பாத்திரம் அவரால் உயிர் பெற்றிருக்கிறது. நடிப்பில் கால் பதிக்க இப்படம் ஒரு தூண்டுகோலாக அமைந்தால் அதில் பொய்யில்லை. அடுத்து, சமையல்காரன் பாத்திரத்தில் வரும் சக்திமணி இயல்பிலேயே சமையல்காரர் என்பதால் பாத்திரத்தின் வெளிப்பாடு மிகச் சரியாக திரையில் வெளிப்பட்டிருக்கிறது. கவிஞனுடைய வாழ்க்கையை படம் கதைக்களனாக கொண்டிருப்பதாலும், இயக்குநர் காட்சிகளை இரவுகளில் மட்டுமே எடுத்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது. கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், அளவான படத்தொகுப்புடன் படம் பிடித்திருப்பதும், படத்தின் பின்னணி இசையை செயற்கையாக சேர்க்காமல் சூழலில் உள்ளதையே (ப்ண்ஸ்ங் ழ்ங்ஸ்ரீர்ழ்க்ண்ய்ஞ்) பதிவு செய்திருப்பதும் படத்தின் யதார்த்தத்திற்கு துணை நின்றிருக்கின்றன.

ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டிணத்தை பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் குருமூர்த்தி, பாண்டிச்சேரி மைய பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பை முடித்த மாணவர். சுமார் ஐந்து வருடங்கள் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து சினிமாவின் மீதுள்ள காதலால் அதை விட்டுவிட்டு திரைப்படம் இயக்க வந்திருக்கிறார். சென்னை, வடபழனியில் அமைந்துள்ள பிரசாத் ஃபிலிம் மற்றும் டி.வி. அகடமியில் இயக்குநர் பிரிவில் பயின்ற இவர் "கடைசிப் பாடல்' என்னும் இக் குறும்படத்தை மறைந்த பிரபல எழுத்தாளர் புதுமைபித்தனின் "அவன் யந்திரம் அல்ல' என்னும் சிறுகதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறார். இப்படம் "மக்கள் தொலைக்காட்சி'யில் "பத்து நிமிட கதைகள்' குறும்பட போட்டியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். தமிழ் குறும்படச் சூழலில் இப்படம் ஒரு மாறுபட்ட முயற்சி. வாழ்த்துவோம்!

Comments

Popular Posts