கதை எழுது - 19

1. போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக்காட்டி மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது உறங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிமிக்க உயிரோவியங்கநிளை, அந்த மனிதாபிமானத்துக்கு விரோதமாயிருக்கும் - இருந்து வருகின்ற மனித மிருகங்கள் மேல் வெறுப்பைக் கக்கி உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் கதைகளை.....எழுதவேண்டும். இதுவே என் எண்ணம்.
2. எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும் என்பது நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துடுக் கொண்ட பிரதிக்ஞை. இவை இரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்? படிப்பதில்தான் என்ன பயன்?
3. கதைகள் வாழும் மக்களைப்பற்றி எழுத வேண்டும். அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களைப்பற்றி எழுத வேண்டும். மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்களைப்பற்றி எழுதி, படிப்பவர்கள் மனத்தில் பரிவு ஏற்படும்படி செய்ய வேண்டும்.
4. 'மனிதன்' - ஆகா அவனுடைய பெயர்தான் எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய அவனுக்கு மேலாக ஒருவனை வேறு எதையும் என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
5. 'நாவல் எப்படிப் பிறக்கிறது?' என்னைப் பொறுத்தவரை ஏழை எளியவர்கள், துன்பப்படுவோர் விடும் பெருமூச்சில் இருந்து என் நாவல் பிறக்கிறது.
6. இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்கவில்லை. வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கிறது.
கற்பனையிலிருந்து நான் கதைகளை மட்டும் சிருஷ்டித்தால் போதுமானது; அவற்றைப் படிப்பதற்கு வாசகர்களையும் கற்பனையிலிருந்தே சிருஷ்டிக்க வேண்டு. - என்னால் முடியாதய்யா, என்னால் முடியாது.

Comments

Popular Posts