உறவு

திருமணத்திற்கு
முதல்நாள் இரவு
உறவென்று சொல்லி
என்னிடமிருந்தே
என் பாவைடையும்
சட்டையும் பிரித்தார்கள்
தண்ணீரில் முக்கியெடுத்து
அழகிய கறுப்பு முகத்திற்கு
வர்ணம் அடித்தார்கள்
சற்றும் பொருத்தமில்லாத
புடவைக்குள் பதுக்கினார்கள்
பஞ்சடைந்த தலைகளூடான
பக்கத்து வீட்டு அக்காக்கள்
காதை கிழிக்கும்
சப்தங்களுடன்
தாம்பூலத்தில் பூக்களோடு
கத்தியையும் மறைத்தே
காலடியில் வைத்தார்கள்
ஊர் பெரிசுகள்
மிருதுவான தலையில்
சூடினார்கள்
கனத்த மல்லிகையையும்
அதனோடு விலங்கிட்டு
சுதந்திரத்தையும்
புதைத்தபடி
மங்கலமுடைய
உள்ளூர் கிழவிகள்
ஆத்தா முந்தானையில்
முகம் புதைத்து விம்ம
அப்பன் சுவர்பக்கம் திரும்பி
பெருங்குரலெடுத்து அழ
தோழிகள் கண்ணீருடன்
விலகிக்கொள்ள
விலங்கிட்டு
அழைத்துச் செல்கிறார்கள்
மண்டபத்துக்கு.

Comments

Popular Posts