பியரும் பின்னிரவும்
செம்மண் புழுதியோடு
தினசரி
வழிவழிப் பார்த்து
வியர்த்து நின்றவனை
பனைமரம் தாண்டியதும்
பார்த்து சிரித்து வைத்தாள்
பிரிதொரு நாளில்
புகைப்படம் சேர்த்த கடிதம்
சைக்கிள் பயணித்தின்போது
மறைத்து அனுப்பப்பட்டது
மறதியாய் எடுத்த பயணச்சீட்டில்
குற்றுயிரும் குலை உடலுமாய்
பதில் அனுப்பி வைத்திருந்தாள்
தம்பியிடம்
ரூபாயோடு ஒட்டிய காதலையும்
நினைத்தவனை மறக்கச்சொல்லி
உறவு நின்றதும் நிலை மறந்தாள்
மாற்றங்கண்டு பிதற்றியபடியே
மாறித் தொலைந்து நின்றேன்
பியரோடு ஒரு பின்னிரவில்
கற்கண்டாய் காலம் கரைந்தது
இளமயிர் நரைக்கத் துவங்க
உதிர்ந்த முடியின் ஒவ்வொன்றிலும்
செம்மண் புழுதிபடிந்த சாலையில்
தேடுகிறாள் வாழ்க்கையை
ஏதும் அறியாதவள்போல்
என் பழைய காதலி.
Comments
Post a Comment