தான்யா என்றொரு தேவதை

தான்யாவை
அவளது கர்ப்பகாலத்தில்
இலையுதிர்காலத்தின்
பனிப்பொழிவில்
ஒரு அதிகாலை அயர்ந்து
தூங்கிக்கொண்டிருக்கும்போது
அவளை மெல்ல முத்துமிட்டேன்
திருமணத்தின்போதை விட
அவள் இன்று
பேரழகியாக காட்சி தருகிறாள்
எனக்காக அவள்
வாழ்வின் பெரும்பகுதிகளை
துக்ககரமாகவும்
வேதனைகள் அதிரவும்
பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறாள்
அவளுக்காக எதையும்
இழந்துவிடாத சுயநலக்காரன்
நான்
எத்தனையோ இரவுகளில்
அவள்
தனிமையின் உக்கிரத்தை
அநுபவிக்க காரணமாயிருந்திருக்கிறேன்
உலகத்தின் இதயமற்ற மனிதர்களில்
நானும் ஒருவனாய்
உலவி வந்திருக்கிறேன்
கழிவிரக்கமற்றவன் நான்
மஞ்சள் நிறக்கதிர்களை
படம்பிடிக்கும் அவசரத்தில்
எல்லாவற்றையும்
மறந்தவனாயிருக்கும் எனக்கு
தான்யாவின் காதல்
புரியாமல் போய்விட்டது
இதோ அவள்
சூரியனின் ஒளிக்கதிர்களை விடவும்
ஒளிவீசும் முகமுடையவளாய்
அறையை நிரப்புகிறாள்
ஒரு குழந்தையின்
சிரிப்பைப்போல யாவும்
அவள்முன்
கைக்கட்டி நின்று
மௌனமாயிருக்கிறது
அவள் உறக்கத்தை
கலைக்க மனமின்றி
நான் அவள் மெல்லிய
பாதங்களைக் கட்டிக்கொண்டு
விம்மத் தொடங்குகிறேன்.

Comments

Popular Posts